Courtesy:www.warwithoutwitness.com

திருக்குறள் உங்கள் மொழியில் (Thirukural in Your Language)

Tuesday 20 December 2011

ஆனந்த விகடன்- தலையங்கம் : கவனம் தேவை - கேரளத்து யானையே..!

சட்டபூர்வமாக காய்கறியில் தொடங்கி, சட்ட விரோதமாக அடிமாடு வரையில் அத்தனைக்கும் தமிழ்நாட்டையே நம்பி இருக்கும்போதும், ஓர் இடைத்தேர்தலுக்காக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேவை இல்லாத பீதியையும் பதற்றத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி, அவர்களைத் தமிழ்நாட்டின் எதிரிகளாக உசுப்பிவிடும் வேலையில் இறங்கி இருக்கிறது கேரளத்து அரசியல் கூட்டம்!

தமிழ்நாட்டில் இருந்து தங்கள் மாநிலத்துக்குள் வரும் பதின்மூன்று சாலைகளுமே தங்கள் அடிப்படை ஜீவாதாரத்துக்கான ரத்த நாளங்கள் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், அத்தனை பாதைகளையும் தாங்களே அடைத்துக்கொள்ளும் அளவுக்கு, கண்றாவி அரசியல் அவர்களின் கண்களை மறைத்திருக்கிறது!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரிகால் சோழன் எழுப்பிய கல்லணை இன்றைக்கும் காட்டி நிற்கும் கட்டுக்குலையாத கம்பீரம்தான், நூற்றுச் சொச்சம் வருடங்களுக்கு முன் வெளிநாட்டு பென்னி குயிக் இந்த அணையைக் கட்டுவதற்கான அஸ்திவாரம் என்பதை எத்தனை உரக்க எடுத்துச் சொன்னாலும், கேரளத்துச் சூழ்ச்சியாளர்களின் காதில் அது விழத்தான் செய்யாது. அப்படி விழுந்துவிட்டால், பிறகு எப்படி நடக்கும் அவர்களின் தரங்கெட்ட தேர்தல் பிழைப்பு?

ஓங்கி உயர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை பூகோளரீதியாகப் பிரித்தபோதும், எல்லையே இல்லாத அன்போடு தமிழ் மக்களுடன் ஒட்டி உறவாடும் மலையாள மக்கள் இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணை மூலம், இல்லாத பொல்லாத விரிசலை உண்டாக்கி, மடுவை மலையாக்கிக் காட்டும் இந்தச்சூழ்ச்சியின் பின்னால் உள்ள சுயநலத்தை அவர்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

தண்ணீரால் தமிழனின் தாகம் தீருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், விவசாயிகளின் வாழ்க்கை சுபிட்சத்தைச் சகிக்க முடியாமல், பிழைப்பில் மண் அள்ளிப் போடுவதில் அற்ப சுகம் காண நினைத்தால்... அது கேரளத்து யானை தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட கதையாகத்தான் முடியும்!

சிறுபுத்தித் தலைவர்களுக்கு வேண்டுமானால் அந்த அரசியல் அரிப்பு இருந்துவிட்டுப் போகட்டும். ஆதரவு காட்டும் தமிழகத்தோடு, அப்பாவி மக்களுக்கு வேண்டாம் பகை!

அதே சமயம், தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்...

அதர்மமே என்றாலும், அதிலும் ஒன்றாகச் சேர்ந்து நிற்கும் கேரளத்துத் தலைவர்களிடம் இருந்து நீங்கள் இப்போதாவது பாடம் கற்றுக்கொள்ளுங்கள். தற்காலிகமாகவேனும் உங்கள் கட்சிப் பேதங்களை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு, ஒருமித்த குரலோடு டெல்லியை முற்றுகை இடுங்கள். கேரளத்தை ஆள்வதும் காங்கிரஸ்தான் என்ற சுயநலத்தாலோ என்னவோ, மத்திய அரசு காட்டும் மௌனத்தைக் கலைக்கப் போராடுங்கள்!

ஏழு கோடி மக்களின் எழுச்சிக் குரலை நீங்கள் அங்கே ஒற்றுமையோடு எதிரொலிப்பதன் மூலம்தான், தூங்குவதுபோல் நடிக்கும் மத்திய அரசைத் 'தட்டி' எழுப்ப முடியும். தமிழனின் தர்ம யுத்தமும் அப்போதுதான் ஜெயிக்கும்!

No comments:

Post a Comment